சுற்றி வளைத்து தாக்குதல்..! பதிலடி தரும் இஸ்ரேல்..!! தீவிரமடையும் காஸா போர்!

0 2038

காஸாவில் உள்ள பாலஸ்தீன குடியிருப்பின் மீது விழும் ஒவ்வொரு வெடிகுண்டுக்கும் பதிலடியாக தங்களின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதி ஒருவரை கொல்லப் போவதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் போராளி குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் தொடுத்துள்ளன.

காஸா பகுதியில் இடைவிடாமல் ஒலித்து வருகிறது, குண்டுகள் வெடிக்கும் சத்தம். அடுத்த கட்டமாக தரைவழியாக காஸாவுக்குள் நுழைய ஆயத்தம் மேற்கொண்டு வருகிறது இஸ்ரேல்.

காஸாவை நோக்கி ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்ட பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீசியதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏற்கனவே காஸாவுக்கு மின்சாரம் செல்வதை தடுத்துவிட்ட இஸ்ரேல், உணவு, எரிபொருளுக்கு தடை ஏற்படுத்தி உள்ளது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து அத்யாவசியப் பொருட்களை காஸாவுக்கு அனுப்பினால் லாரிகள் மீது குண்டு வீசப்படும் என்றும் எச்சரித்துள்ளது, இஸ்ரேல். காசாவில் உள்ள ஒரே மின்நிலையத்திலும் எரிபொருள் தீர்ந்து சில மணி நேரங்களில் மின் உற்பத்தி முடங்கி இப்பகுதியே இருளில் மூழ்கும் என்று தெரிகிறது.

முதல் நாள் தாக்குதலின் போது பிடித்து வந்த இஸ்ரேலியர்கள் 150 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர். காஸாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் மீதும் அறிவிப்பின்றி வீசப்படும் ஒவ்வொரு குண்டுக்கும், தங்கள் பிடியில் உள்ள ஒவ்வொரு இஸ்ரேலியரை கொல்லப்போவதாக ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

மறுபுறம், லெபனானில் இருந்து ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலின் இரு கவச வாகனங்கள் சேதமடைந்தன. இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். பதிலுக்கு, லெபனானின் தெற்கு பகுதி நகரங்களை நோக்கி இஸ்ரேல் பீராங்கி தாக்குதல் நடத்தியது.

மறுபுறம், இஸ்ரேலின் மற்றொரு அண்டை நாடான சிரியாவில் இருந்தும் இஸ்ரேலை நோக்கி குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டன. அதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

ஈரான், ஈராக், ஏமன் போன்ற நாடுகளும் இஸ்ரேல் மீது நேரடியாக அல்லது மறைமுகமாக போர்த் தொடுக்க வாய்ப்புகள் இருப்பதாக ராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜெரால்டு ஃபோர்டு என்ற உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ள அமெரிக்கா, தற்போது போர் விமானம் நிறைய நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காஸாவில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் 20 லட்சம் பேர் வெளியேற மனிதாபிமான வழித்தடம் அமைத்துத் தருமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments