வீல் கூரை.. மழையை தடுக்கவா ? மக்கள் மண்டையை பிளக்கவா..? என்.ஐ.டி அழகுராஜாக்கள் கிரிஞ்சி..! ராஜூ பாயை மிஞ்சும் விஞ்ஞானம்

0 3632

திருச்சி என்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் வெளியூர் மாணவர்கள் விட்டுச்சென்ற பழைய சைக்கிள்களை எடுத்து வந்து அதனை கொண்டு கலைநயம் மிக்க கூரைகள் அமைப்பதாக கூறி, செல்லூர் ராஜூவின் தெர்மகோல் விஞ்ஞானத்தை மிஞ்சும் வகையில் ஓட்டை உடைசலான சைக்கிள் வீல்களால் கூரை அமைத்து அதற்கு திறப்பு விழாவும் நடத்திய கூத்து திருவெறும்பூர் உழவர் சந்தையில் அரங்கேறி இருக்கின்றது.

உழவர் சந்தைக்கு வருவோரின் தலையை பதம் பார்க்கும் வகையில் பழைய சைக்கிள் வீல்களுக்கு வர்ணம் பூசி விஞ்ஞான முறையில் திருச்சி என்.ஐ.டி கல்லூரி ஆர்கிடெக் பிரிவு ஆல் இல் ஆல் அழகுராஜாக்களால் உருவாக்கப்பட்ட வீல் கூரை இது தான்..!

திருச்சி என்.ஐ.டி கல்லூரிக்குள் மாணவர்கள் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இங்கு சைக்கிள்களை வாங்கி பயன்படுத்தும் வெளியூர் மாணவர்கள் தங்களது படிப்பு முடிந்ததும் சைக்கிள்களை அப்படியே அங்கே விட்டுச்சென்று விடுவதால் வளாகத்தின் சில பகுதிகள் காயலான் கடை போல காட்சி அளித்துள்ளது. அந்த காயலான் கடை சைக்கிள்களை கொண்டு நவீன முறையில் கூரைகள் அமைத்திருப்பதாக கூறியதோடு அதனை திறந்தும் வைத்தார் என்.ஐ.டி இயக்குனர் அகிலா..!

நவீன கூரைகள் அமைப்பது மழை நீர் உட்புகாமல் இருப்பதற்கு என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும், அப்படி இருக்க என்.ஐ.டியில் மெத்த படித்த அதிமேதாவிகள் அமைத்துள்ள இந்த வீல் கூரையால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பும் மக்கள், மேலிருந்து கழன்று தலையில் விழாமல் இருந்தாலே பெரும் புண்ணியம் என்கிறார்கள். காரணம் அந்த வீலில் பற்சக்கரங்கள் எல்லாம் அப்படியே உள்ளது என்றும் மழையில் நனைந்து கயிறு இத்து போனால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது என்று கூறப்படுகின்றது.

காய்கறிவிற்கும் பெண்களின் இருக்கைக்கு சைக்கிளில் உள்ள டியூப்புகளை கொண்டு குஷன் செய்து கொடுப்பதாக பெருமைப்பட்டுக் கொண்ட கல்லூரி நிர்வாகம், ஓய்வறை என்ற பெயரில் மார்க்கெட்டுக்குள் இன்னும் ஒரு நவீன அரங்கத்தை கட்டமைத்துள்ளனர். உள்ளே போவதற்கு முன்பகவே ஒருவர் பயப்படாதீங்க என்று தைரியமூட்டி அழைத்துச்சென்றார்.

சைக்கிள்களை விட்டுச் செல்லும் மாணவர்களிடம் படிப்பை முடித்து செல்லும் போது அதனை கல்லூரிக்கு கொடுத்து விட்டு செல்லுங்கள், அவை துருபிடித்து வீணாக போவதற்கு பதில் ஏழை எளிய மாணவிகள் பயன்படுத்த வழங்குகிறோம் என்று அறிவுறுத்தி இருக்கலாம், அல்லது பழைய சைக்கிள் வீல்களை கொண்டு சாலையோர பழ வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகள் அமைத்துக் கொடுத்திருக்கலாம், இவற்றை செய்ய முடியவில்லை என்றால் பழைய இரும்புக்கு போட்டு அதில்வரும் பணத்தை மாணவர்கள் நலனுக்கு பயன் படுத்தி இருக்கலாம், அதை விடுத்து கிரியேட்டி விட்டி என்று கிரிஞ்சி செய்து வைத்திருப்பதாக என்.ஐ.டி அர்கிடெக் அழகுராஜாக்களை உள்ளூர் இளைஞர்கள் கலாய்த்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments