ரோகிணியில் ‘லியோ’ சம்பவம்.. டிரைலர் பார்த்த ரசிகர்களால் 200 இருக்கைகள் நொறுங்கின..! 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டதால் மொத்தமாக அம்போ..!

0 5293

சென்னை கோயம்பேட்டில் போலீசாரின் பேச்சை கேட்காமல் 10 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலித்துக்கொண்டு லியோ டிரைலர் பார்க்க விஜய் ரசிகர்களை அனுமதித்த ரோகிணி திரையரங்கில் 200க்கும் மேற்பட்ட இருக்கைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.

லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டைக் காண அலைகடலென திரண்டிருந்த விஜய் ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் கூட்டம் தான் இந்த காட்சிகள்..!

ரசிகர்களின் ஆவலை காசாக்க எண்ணிய ரோகிணி திரையரங்கு நிர்வாகம் ஆளுக்கு 10 ரூபாய் டிக்கெட் போட்டு 3000 பேரை உள்ளே அனுமதித்ததும், முண்டியடித்துக் கொண்டு ஓடினர் ரசிகர்கள்.

சரியாக 6:30 மணிக்கு லியோ டிரைலர் வெளியான நிலையில் கத்திக் கூச்சலிட்டு இருக்கைகளின் மீது ஏறி உற்சாகமாக துள்ளிக்குதித்தனர். அவர்களின் துள்ளலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் ரோகிணி திரையரங்க இருக்கைகள் உடைந்து நொறுங்கின

லியோ டிரைலர் பார்த்து முடித்து ரசிகர்கள் வெளியே சென்ற போது ரோகிணி மெயின் ஸ்கிரீனில் முகால்வாசி இருக்கைகள் உடைத்து நொறுக்கப்பட்டிருப்பதை கண்டு திரையரங்க ஊழியர்கள் திகைத்து நின்றனர்.

பல ரசிகர்கள் காலில் அணிந்த செருப்பை பறிகொடுத்து விட்டுச் சென்ற நிலையில் , ஒரு ரசிகர் ஒற்றை கால் செருப்புடன் நடந்து சென்றார்.

சிலர் தங்கள் பாடபுத்தகங்களை கிழித்து வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இப்படியெல்லாம் நடக்கும்- அனுமதிக்க வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்காமல் ரசிகர்களுக்காக ரோஹிணி திரையரங்கில் டிரைலரை வெளியிட்டு 200க்கும் மேற்பட்ட இருக்கைகளை பறிகொடுத்துள்ளதாக போலீசார் கூறிவருகின்றனர். அதே நேரத்தில் லியோ ரசிகர்கள் சம்பவம் குறித்து திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்ட போது, அத விடுங்க தம்பி, டிரைலர் எப்படி இருந்துச்சி.. சூப்பரா இருந்துச்சில்ல... என்று படத்துக்கு புரமோஷன் செய்ய ஆரம்பித்தார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments