சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

0 2950

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த அம்மச்சியாபுரம் ஊராட்சியில் சாலையை தரமாக அமைக்கச் சொன்ன ஊர்மக்களை , ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சாலையை தரமாக போடச்சொன்னதற்காக, சாலைப்பணியை நிறுத்திவிடுவோம் என்று ஒப்பந்ததாரருடன் சேர்ந்து மக்களை அடாவடி பேச்சுக்கள் மூலம் மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர்..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்த சாலைகளை புதுப்பிப்பதற்காக 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்காம்பட்டி முதல் திருமலாபுரம் விளக்கு வரை தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

தரமற்ற முறையில் நடந்த சாலைப்பணியை தடுத்து நிறுத்திய அப்பகுதியை சேர்ந்த மக்கள், தார்ச்சாலை போடும் பணியை மேற்கொண்டவர்களிடம் , தங்கள் பகுதிக்கு ஒரு இன்ச் கூடுதலாக சாலை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

25 மில்லி மீட்டர் தான் போடுவோம் என்ற ஒப்பந்ததாரர் , மக்கள் வீடியோ எடுத்ததால் பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு இன்ச் சேர்த்து தார்ச்சாலை அமைத்துக் கொடுத்தார். ஒப்பந்ததாரரின் அழைப்பின் பேரில் அங்கு வந்த அமச்சியாபுரம் ஊராட்சித் தலைவர் பஞ்சமணி சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை பணிகளை தடுத்தது யார் ? என்று பொதுமக்களை ஒருமையில் பேசி அடாவடி செய்தார்.

பொதுமக்கள் கேட்டுக் கொண்டதால் சாலை சரியாக போடப்பட்டதாக ஒரு பெண் கூறிய நிலையில், அந்தப்பெண்ணை ஆபாசமாக பேசி அறுத்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார் பஞ்சமணி.

ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படும் சாலைப்பணி தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கூற கூடாதா ? என்று ஊர் மக்கள் எதிர் கேள்வி எழுப்பினர். அனைவரும் வீடியோ எடுப்பதை கண்டதும், ஊராட்சி மன்றத் தலைவர் பஞ்சமணி பம்மியபடியே அங்கிருந்து சென்றார்.

செய்திகளை மேலும் அறிய எங்களது வாட்ஸ் ஆப் லிங்கை கிளிக் செய்து இணையவும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments