25 நிமிட கோடீஸ்வரன்! ரூ. 9000 கோடிக்கு தற்காலிக அதிபதி..!! டாக்ஸி டிரைவருக்கு வந்த சோதனை!

0 2370

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாயை திடீரென வரவு வைத்தாக கால் டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய தொகை யாருக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பது குறித்து வங்கி நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும் என ஓட்டுநரின் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

சரியாக 25 நிமிடங்கள்... 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தற்காலிக அதிபதியாக இருந்தவர் ராஜ்குமார் என்ற இந்த கால் டாக்ஸி ஓட்டுநர்.

சென்னை கோடம்பாக்கத்தில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வரும் ராஜ்குமாருக்கு சொந்த ஊர் பழனியை அடுத்த நெய்க்காரன்பட்டி. தமது செல்ஃபோனுக்கு கடந்த 9 ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும், அதில் தமது வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார் ராஜ்குமார்.

தமது வங்கிக் கணக்கில் பேலன்ஸ் 105 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், ஏமாற்றுப் பேர்வழிகள் யாரோ குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்களோ எனற முதலில் சந்தேகப்பட்டதாக கூறினார் ராஜ்குமார்.

தமது நண்பருக்கு முதலில் ஆயிரம் ரூபாயையும், பின்னர் அடுத்தடுத்து 2 முறை 10 ஆயிரம் ரூபாயும் அனுப்பிப் பார்த்துள்ளார். அந்தத் தொகை நண்பருக்கு சென்ற பிறகே தமது கணக்கில் பணம் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டதாக தெரிவித்த ஓட்டுநர் ராஜ்குமார், தாம் 21 ஆயிரம் எடுத்த சிறிது நேரத்தில் தமது கணக்கில் இருந்த பணத்தை வங்கி நிர்வாகம் திருப்பி எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு பேசி ஒரு தரப்பினர், 21,000 ரூபாயை திருப்பித் தர வேண்டாம் என்று கூறிய நிலையில், மற்றொருவர் தம்மை தொடர்பு கொண்டு தம்மை சிறையில் தள்ளப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார் ராஜ்குமார்.

பணத்தை திருப்பித் தருவதற்காக தி.நகர் கிளையை அணுகிய போது, அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் புது டாக்ஸி வாங்க கடன் கொடுக்கத் தயார் என்றும் வங்கி ஊழியர்கள் கூறியதாக ராஜ்குமார் குறிப்பிட்டார். இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று வங்கி ஊழியர்கள் தினமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார் ராஜ்குமார்.

தவறுதலாக நடந்திருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை யாருக்கு பரிவர்த்தனை செய்ய திட்டமிட்டு இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார், ராஜ்குமாரின் வழக்கறிஞர் செந்தில்குமார். பணம் யாருடையது என்று தமிழ்நாடு மெர்கண்டயில் வங்கியிடம் விசாரிக்குமாறு வருமான வரி மற்றும் காவல் துறையிடம் மீது புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

9 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை இவ்வளவு கவனக் குறைவாக கையாண்டது ஏன், இவ்வளவு பெரிய தவறு நடந்தது எப்படி என்பது பற்றி விரிவாக விசாரித்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments