ஜி20 உச்சி மாநாடு நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு தலைநகர் டெல்லி முழுவதும் விழாக்கோலம்

0 2163

ஜி20 உச்சி மாநாடு நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாநாட்டில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் குறித்து தலைவர்கள் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மாநாட்டின் கூட்டறிக்கையில் ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து அறிக்கை வெளியிட ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜி20 மாநாட்டில் இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒருமித்த கருத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக பல மாற்று முறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும், இதற்காக இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு டெல்லி பிரகதி மைதானத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிநவீன கட்டுப்பாட்டு அறையிலிருந்து நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் உச்சி மாநாட்டின் நிகழ்வுகள் கண்காணிப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் யமுனை நதியில் படகில் சென்று தீவிர பாதுகாப்புபணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டை ஒட்டி ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர் விமானங்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநாட்டை ஒட்டி டெல்லியின் முக்கியக் கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் லேசர் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு கண்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments