ஆளுநர் பிறந்தநாளுக்கு கேக் தயாரித்த சிறுமி... 11-ம் வகுப்பு மாணவி தொழில்முனைவோர் ஆனார்

0 1617

கேக் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி, இளம் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளார் 15 வயதேயான சிறுமி ஒருவர். ஆளுநரின் பிறந்தநாள் கேக் உள்பட 300-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் எடுத்து வருவாய் ஈட்டியுள்ளார் இந்த சிறுமி..

சின்னஞ்சிறு வயதிலேயே சுயமுயற்சியால் தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கேசிகா என்ற இந்த சிறுமி...

கொரோனா காலத்தில் பள்ளி விடுமுறை விடப்பட்டபோது, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த கேசிகாவுக்கு சமையல் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை வாங்கிக் கொடுத்த மைக்ரோ ஓவனைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தவர்களுக்கு கேக் செய்து கொடுத்தார்.

கேக் செய்து வெளியில் விற்கலாமே என்ற எண்ணம் தோன்றியதால், அக்கம்பக்கத்தினரிடம் ஆர்டர் எடுத்து கேக் செய்து கொடுத்து அவர்களின் பாராட்டுகளைப் பெற்றார் கேசிகா. KS கிச்சன் என்ற பெயரில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி 300க்கும் மேற்பட்ட ஆர்டர்களுக்கு கேக் செய்து கொடுத்திருக்கிறார் இவர்.

கேக்குகளை தயாரிப்பது குறித்து ஆறு மாதம் தொழில் ரீதியாக பயிற்சி பெற்ற கேசிகா, தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் கேக் தயாரிப்பு குறித்த வகுப்புகளை எடுத்து வருகிறார். முத்தாய்ப்பாக, ஆளுநர் ஆர்என் ரவி பிறந்தநாளில், தான் தயாரித்த கேக் வெட்டப்பட்டதாக பெருமிதத்துடன் கூறுகிறார் கேசிகா..

எந்தவொரு வேலையையும் சலிப்புடன் செய்வோர் மத்தியில், சின்னஞ்சிறு வயதிலேயே சொந்தமாக தொழில் தொடங்கி, சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையூட்டி மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார் சிறுமி கேசிகா..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments