தொகுதிக்கு 30 ஆயிரம் ஓட்டுக்களை உறுதியாக்க எம்.ஜி.ஆர் பாணி டெக்னிக்..! முதியவர்களை அழைத்து பண உதவி

0 2361

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் பேரை நிர்வாகிகளாக நியமிக்கபோவதாக விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய், லியோ பாடலில், நான் வரவா... என்று கேட்ட நாளில் இருந்து அவரது அரசியல் வருகைக்கான ஏற்பாடுகளை ஜரூராக செய்து வருகின்றனர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர். இந்த இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கையாள வேண்டிய அரசியல் டெக்னிக் குறித்து அறிவுறுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் பனையூரில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 31 வருடங்களுக்கு முன்பாக மன்றமாக இருந்து, 15 வருடங்களுக்கு முன்பு மக்கள் இயக்கமாக மாறியதாகவும், அடுத்ததாக வேறு ஒரு பரிமானத்துக்கு தயாராக இருப்பதாகவும் விஜய்யின் அரசியல் வருகையை சூசகமாக தெரிவித்தார். சமூக ஊடகங்களின் தாக்கம் தற்போது பெரிய அளவில் இருப்பதால் விஜய்மக்கள் இயக்கத்தில் 3 லட்சம் பேர் கொண்ட தகவல் தொழில் நுட்ப அணி கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், 1500 வாட்ஸ் அப் குழுக்கள் மூலம், விஜய் மக்கள் இயக்க பணிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருவதாக தெரிவித்தார்

மக்கள் இயக்கத்தால் பயன் அடைந்தவர்களின் பேட்டிகளை ஷாட்ஸ் மற்றும் ரீல்ஸ் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் மாவட்ட தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்றும் தலைமையின் அனுமதியின்றி எந்த ஒரு செய்தியையும் பயன்படுத்தவோ, பகிரவோ, லைக் செய்யவோ கூடாது , நம்மை விமர்சிப்பவர்களை இழிவுப்படுத்தி கருத்து பதிவிடக்கூடாது என்றும் திட்டினால் கடந்து போகவும், நாகரீகமான முறையில் கருத்து பதிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி, பேரூராரட்சி, ஊராட்சி, கிளை ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணை செயலாளர்கள்,துணைச்செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், இதன் மூலம் தொகுதிக்கு 30 ஆயிரம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்

தொகுதிக்கு 30 ஆயிரம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்படும் போது அவர்களின் குடும்பத்தின் வாக்குகளையும் சேர்த்து கணிசமாக வாக்குகளை அள்ளிவிடலாம என்ற திட்டத்தில் அ.இ.த.வி. ம.இ அமைப்பினர் இந்த அரசியல் போஸ்டிங் டெக்னிக்கை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் உணவு பறிமாறிக்கொண்டிருந்த போது, விஜய்யை சந்தித்து உதவி கேட்டு வந்த முதிய வயது தம்பதியரிடம் எம்.ஜி.ஆர் பாணியில் செலவுக்கு பணம் கொடுத்ததோடு, தொடர்ந்து உதவுவதாக வாக்குறுதி அளித்து, சாப்பிடச்சொல்லி அனுப்பி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments