காவிரி நீர் பங்கீடு தொடர்பான உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்

0 1156

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிக்கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதன் மீது நடைபெற்ற விசாரணையின் போது, 24 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்துவிடவில்லை என்றால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கர்நாடக அரசு தரப்பில், தங்கள் மாநிலத்தில் இது வறட்சியான ஆண்டாக உள்ளதாகவும், போதிய மழை இல்லாததால், அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஆகஸ்ட் 12 முதல் 26ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் அடுத்த இரு வாரங்களுக்கு நீர் திறப்பது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments