லீ மெரீடியனை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் கையகப்படுத்த முடியாது.. எம்.ஜி.எம். ஹெல்த்கேரின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி..!

0 2082

லீ மெரீடியன் ஹோட்டல்களை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்த தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய உத்தரவு சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மற்றும் கோவை லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வரும் தொழிலதிபர் பெரியசாமி பழனி கவுண்டருக்கு சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், தங்களுக்கு வழங்க வேண்டிய 18 கோடி ரூபாயை உரிய அவகாசத்தில் செலுத்தவில்லை என்றும் அந்நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இந்திய சுற்றுலாக் கழகம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் மனு செய்தது. அதன் பேரில், அப்பு ஹோட்டல் நிறுவனத்தை சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் 423 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் திட்டத்திற்கு தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்திருந்தது.

இதனை எதிர்த்து பெரியசாமி பழனி கவுண்டர் தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் 423 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என்று தெரிவித்திருந்த அவர், கடன் வழங்கியவர்களுக்காக 450 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இதை ஏற்ற மேல்முறையீட்டு தீர்ப்பாயம், லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எம்ஜிஎம் ராஜகோபாலன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அப்போது, கடன் வழங்கியவர்களுக்கான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக பெரியசாமி பழனி கவுண்டர் கூறியதை ஏற்று மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக எம்.ஜி.எம் ராஜகோபாலன் மீண்டும் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments