இருசக்கர வாகனம் மீது காரை வேண்டுமென்றே இடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை கார் ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே இடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.
மொளச்சூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு, ஏழுமலை ஆகியோர் சுங்குவார்சத்திரத்தில் மார்க்கெட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது, முன்னால் சென்ற கார் ஒன்று இண்டிகேட்டர் போடாமல் திடீரென சாலை வளைவில் திரும்பியதாகவும், இதனால் அந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதியதாகவும் கூறப்படுகிறது. உடனே காரை ஓட்டிய பாங்கிராஜ் என்பவருக்கும் பைக்கில் சென்றவ விஷ்ணுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததை அடுத்து அங்கிருந்து புறப்பட்ட விஷ்ணுவின் இரு சக்கர வாகனத்தின் மீது பாங்கி ராஜ் தமது காரை ஓட்டிச் சென்று இடித்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட விஷ்ணு மற்றும் ஏழுமலை, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த விஷ்ணுவின் மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் கார் ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாங்கிராஜை கைது செய்த போலீசார் அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
Comments