மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுவுடன் வந்த மாற்றுத்திறனாளி சிறுவன்.. பொறுமையாகக் குறையைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

0 1527

கள்ளக்குறிச்சியில் பள்ளி செல்வதற்கான வாகன உதவி கேட்டு மனுவோடு வந்த மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி சிறுவன் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு அழுத நிலையில், மாவட்ட ஆட்சியர் அவரை சமாதானம் செய்து பொறுமையாக குறைகளைக் கேட்டறிந்தார்.

ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற அந்த சிறுவனுக்கு 15 வயதாகும் நிலையில், உடல் வளர்ச்சியின்றி மூன்றரை அடி உயரம் மட்டுமே உள்ளார்.

பேருந்து வசதி இல்லாத எஸ்.ஓகையூர் என்ற கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நடந்து சென்று வரும் சிறுவன் கார்த்திகேயனுடன் அவரது புத்தகப் பையை சுமக்க ஒருவர் சென்று வரவேண்டும் என்று கூறப்படுகிறது.

எனவே மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் வாகனம் கேட்டு மனுவுடன் அவர் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு தன்னைப் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர்களைப் பார்த்ததும் மிரண்டு அழத் தொடங்கிய சிறுவனை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் சமாதானம் செய்து அருகில் அமர்ந்து பொறுமையாக குறைகளை கேட்டறிந்தார்.

பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இயக்குகின்ற அளவிற்கு கார்த்திகேயனுக்கு உடல் திறன் இல்லாததால், வேறு வகையான மாற்று வாகனம் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments