'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க நடிகர் தேவை எனக்கூறி மோசடி - லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பலுக்கு போலீசார் வலை

0 3537
'வாடிவாசல்' படத்தில் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க நடிகர் தேவை எனக்கூறி மோசடி - லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பலுக்கு போலீசார் வலை

'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க புதுமுக நடிகர், நடிகைகள் தேவை எனக் கூறி கியூ ஆர் கோடு மூலம் பண வசூலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்துக்கு வாடிவாசல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என்று சமூக வலைதளத்தில் அண்மையில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதை பார்த்து விட்டு விண்ணப்பித்த புதுமுகங்களை தொடர்பு கொண்ட சிலர், சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்றால் முதலில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினராவதற்கான கட்டணத்தை அனுப்பி வைக்குமாறு வங்கி கணக்குக்கான கியூ ஆர் கோடு ஒன்றை அவர்கள் அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது. அந்த கியூ ஆர் கோடின் மூலம் பணத்தை செலுத்தியவர்கள், அதன் பின் பதில் வரவில்லை என்று கூறி கலைப்புலி தாணுவின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

அதற்கு, தாங்கள் சமூக வலைதளத்தில் விளம்பரம் எதுவும் தரவில்லை என்று தெரிவித்துள்ள கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் திரைப்பட நிறுவன இணை இயக்குனர் ஜகதீசன், தங்கள் பெயரைப் பயன்படுத்தி பணம் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments