வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!

0 3605

சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது சாலையோர பள்ளத்தில் வழக்கி விழுந்து காயமடைந்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் 17 வயது சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த தங்களது மகளிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே, முகப்பேர், நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் தெருவில் விளையாடும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல் சென்று ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது வாய்மொழியாக ஏராளமானோரிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றதால் தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

புகார் வரப்பெற்ற பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் பயன்படுத்திய வாகன எண், அரும்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அங்கு விசாரித்ததில் மர்ம நபர் பெயர் முகப்பேரைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவ்வப்போது நாள் வாடகைக்கு 500 ரூபாய் கொடுத்து வாகனத்தை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.

பகலில் மேடைகச்சேரிகளில் பாடகராகவும், பகுதி நேர ஓட்டுனராகவும் வேலை செய்து வந்த சரவணன், இரவு நேரங்களில் தனது சேட்டைகளை அரங்கேற்றி வந்துள்ளான். எனவே, கொசு மருந்து அடிப்பவர்கள் போல் மாறுவேடத்தில் அவன் வீட்டுக்குச் சென்ற போலீசார், 3 நாட்கள் நோட்டம் விட்டு, சரவணனை மடக்கிப் பிடித்தனர்.

ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு இதே குற்றத்துக்காக கைதாகி சிறை சென்ற சரவணன், ஜாமீனில் வெளியே வந்து சில காலம் அமைதியாக இருந்துள்ளான். பிறகு மீண்டும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சரவணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விரட்டியபோது சாலையோர கழிவுநீர் கால்வாயில் விழுந்ததால் இடது கை எலும்பு முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments