கட்டிலுக்கு அடியில் பதுங்கி ரிசார்ட்டில் தங்கியவர்களை வீடியோ எடுத்த கேடி தப்பி ஓட்டம்.. விழிப்பிதுங்கி நிற்கும் போலீசார்..!

0 4681

நடிகைக்கு சொந்தமான பீச் ரிசார்ட்டில் காதல் ஜோடியின் அறைக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவத்தில் போலீசில் பிடித்துக் கொடுக்கப்பட்ட ரூம் பாய், மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது...

சென்னை கூவத்துர் அடுத்த பரமன்கேணியில் நடிகை காதல் சந்தியாவின் கணவர் வெங்கடேசனுக்கு சொந்தமான பேர்ல் பீச் ரிசார்ட் உள்ளது. இங்கு சென்னை கே.கே. நகரை சேர்ந்த ராமசந்திரன் என்ற 25 வயது இளைஞர் தனது காதலியுடன் தனி வில்லா ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று நள்ளிரவு ராமச்சந்திரன் காதலியுடன் போதை மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது படுக்கை அறையின் கதவை ஸ்பேர் சாவி கொண்டு திறந்து நைசாக அறைக்குள் நுழைந்த ரூம் பாய் சுபாஷ் என்பவர் அந்த பெண்ணிடம் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளான். அவர் விழுத்துக் கொண்டு சத்தமிட்டதும் படுக்கைக்கு அடியில் ஒளிந்துள்ளான். அவனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த நிலையில் அவனது செல்போனில் ராமச்சந்திரனின் காதலி உள்ளிட்ட 50 பெண்கள் உடை மாற்றும் காட்சிகள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே கீச்சனாங்குப்பத்தை சேர்ந்த சுபாஷின் உறவினர்கள் அவனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் , சுபாஷை தாக்கியதாக ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருட்டு பூனைப்போல இருட்டு அறையில் சிக்கிய சுபாஷ் மீது பெண்ணை மானபங்க படுத்துதல், வன்கொடுமை செய்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன் படுத்துவதல் உள்ளிட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காயம் அடைந்த சுபாஷை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க கோரி உறவினர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுபாஷ் அனுமதிக்கப்பட்டான். அவனது உதட்டில் ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் சரியானதை அடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் அவன் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு தனக்கு இன்னும் உடல் நிலை சரியாக வில்லை எனக்கூறி அடம்பிடித்தான். போலீசார் சென்ற சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து சுபாஷ் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே அவனது செல்போனை பார்த்த போது அந்த ரிசார்ட்டில் தங்கிய குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஏராளமாக இருப்பதை கண்டறிந்த போலீசார் இந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டது என்பதை கண்டறியவும் டெலீட் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இங்கு தங்கிச்சென்ற பெண்களிடம் வீடியோக்களை காண்பித்து மிரட்டி பணம் பறித்தானா ? இந்த சம்பவத்தில் சுபாஷுக்கு உதவியாக வேறு நபர்கள் உள்ளனரா ? என்று விரிவான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தனிமையை கழிக்க ஒதுக்குபுறமான பண்ணை வீடு செல்லும் ஜோடிகளுக்கு இந்தச்சம்பவம் எச்சரிக்கைப்பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments