காவல் நிலைய வாசலில் மனைவியின் காதலனை கத்தியால் பலியிட்ட கணவர்.. பெண் போலீசார் அதிர்ச்சி..!

0 2985

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில், மனைவியின் காதலனை கத்தியால் குத்தி பலியிட்ட கணவன் போலீசில் சரண் அடைந்தார். திருமணம் கடந்த காதலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற போலீசாரை மிரள வைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு....

திருமணம் கடந்த காதலில் விழுந்தவரை பெண்ணின் கணவர் கத்தியால் குத்தி நெஞ்சை பிளந்ததால் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் இது தான்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை ஒன்றியம் கோம்பை தொழுவைச் சேர்ந்தவர் தீபாவளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் தடம் மாறிய சங்கீதா அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரோடு திருமணம் கடந்த காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவரம் கணவன் தீபாவளிக்கு தெரியவரவே , தனது மகனின் எதிர்காலம் கருதி , மனைவி சங்கீதாவை கூப்பிட்டு பலமுறை திட்டி அறிவுரை கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இருந்தும் அடங்காத சங்கீதா, ஈஸ்வரனுடன் தலைமறைவானதோடு, கணவன் தன்னை அடித்து துன்புறுத்தி தொந்தரவு செய்வதாக மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. வியாழக்கிழமை விசாரணைக்கு வருமாறு மூவரையும் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆண்டிப்பட்டி போலீசார் அழைத்தனர்

இதையடுத்து விசாரணைக்காக ஈஸ்வரன் மற்றும் சங்கீதா ஆகியோர் ஜோடி போட்டு வந்தனர். இதனை பேருந்து நிலையத்தில் மறைந்திருந்து பார்த்த தீபாவளி கையில் கத்தியுடன் விரட்ட தொடங்கினார். இருவரும் பாதுகாப்புக் கேட்டு ஆண்டிப்பாட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குள் நுழைய முயன்ற போது இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

மனைவியை அபகரித்துச்சென்ற ஈஸ்வரனை காவல் நிலைய வாசலில் வைத்து நெஞ்சை பிளந்து பலியிட்ட தீபாவளி, மனைவியின் தலை மற்றும் உடலில் சில இடங்களில் வெட்டினார். ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சங்கீதா பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை பார்த்த பெண் போலீசார் அதனை தடுக்க இயலாமல் அதிர்ச்சியில் நின்ற நிலையில், அவர்களிடமே கத்தியுடன் தீபாவளி சரண் அடைந்துள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments