மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இளைஞர் கொலை..!

0 2713

சென்னை மெரினா கடற்கரையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாட வந்த இளைஞரை, கடையில் திருட வந்ததாக நினைத்து, கடை உரிமையாளர்கள் அடித்தே கொன்ற சம்பவத்தில் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், 3 இளைஞர்கள் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தெரிவித்த தகவலை அடுத்து, மூவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமத்தனர்.

அவர்களில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் இறந்தவர் பெயர் விக்னேஷ் என்பதும் ஆவடியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

மற்ற இருவர் சஞ்சய், அரவிந்தன் எனவும் நேற்றிரவு சஞ்சய் என்பவரின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் மூவரும் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு அதிகாலையில் புறப்படும் போது, விக்னேஷ் தனது ஹெல்மெட்டை அங்கிருந்த கடையின் அருகில் தேடியுள்ளார்.

வழக்கமாக கடற்கரையில் தங்கி கடையை கண்காணிக்கும் கடையின் உரிமையாளர்கள், ஹெல்மெட்டை தேடிய இளைஞர்கள் மூவரும் திருடத்தான் வந்துள்ளனர் என்று நினைத்து, அவர்களை கட்டைகளை கொண்டு தாக்கியிருப்பதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக பதிவு செய்து, 5 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments