தமிழ் புத்தாண்டு.. காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள்..

0 1000

மகிழ்ச்சிகரமான, மங்கலகரமான ஆண்டாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் படி, சுபகிருது வருடம் முடிந்து இன்று முதல் சோபகிருது ஆண்டு தொடங்கியுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான வருடமான தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அனைவருக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டி பக்தர்கள் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோயிலிலும் பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து பெருவுடையாரை தரிசித்தனர்.

புகழ்பெற்ற நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் 500 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலிலும் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி சுவாமியை தரிசித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments