உங்க கணவர் தரங்கெட்டவரு.. தலைமை ஆசிரியையை போனில் மிரட்டிய பெண் கல்வி அலுவலர்..! தவறு செய்து விட்டு தம் கட்டலாமா.?

0 8762

திருப்பூரில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மாணவனின் தந்தை மீது போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி மாவட்ட கல்வி அலுவலர் மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேயூரை சேர்ந்தவர் அருள்செல்வன். கட்டட பொறியளராக உள்ளார். இவரது மனைவி மல்லிகா அரசு தொடக்க பள்ளி தலைமையாசிரியராக உள்ளார். இவர்களது மகன் கதிரவன் பஞ்சலிங்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவன் கதிரவன் மாநில அளவில் சென்னையில் நடக்கும் மெய்யறிவு கொண்டாட்டத்திற்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மாநில அளவிலான போட்டி சென்னையில் 3ந்தேதி தொடங்கிய நிலையில், கதிரவன் அழைத்துச்செல்லப்படவில்லை.

இதுகுறித்து அருள்செல்வன் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வியிடம் பேசிய பொழுது, அவர் முறையாக பதிலளிக்காததால், உங்களுக்கு தலையில் என்ன ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறதா? என்று அருள்செல்வன் கேட்டதாக கூறப்படுகின்றது.

தன்னை பார்த்து ஆவேசமாக கேள்வி கேட்ட அருள் செல்வனின் மனைவியான பொன்னேகவுண்டன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி அரசு தலைமையாசிரியை மல்லிகாவை தொடர்பு கொண்டு பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, பதிலுக்கு அவரது கணவரை தரங்கெட்டவர் என்றும் அவர் மீது போலீசில் புகார் அளித்து தூக்கி உள்ளே வைக்கப்போவதாகவும் கூறி மிரட்டியதால் பயந்து போன மல்லிகா மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மாவட்ட பள்ளிக்கல்வி அலுவலரின் கவனக்குறைவால் தனது மகன் உள்ளிட்ட இரு அரசு பள்ளி மாணவர்கள் சென்னையில் நடக்கின்ற நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அருள் செல்வன் கோரிக்கை விடுத்தார்.

அருள்செல்வன் தன்னை அவதூறாக பேசியதால், கணவர் குறித்து தலைமை ஆசிரியையிடம் எச்சரித்ததாக தெரிவித்த மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னைக்கு அனுப்பபடாதது குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments