புதுக்கோட்டை டூ சென்னை அரசு பேருந்தில் பயணித்த காதல் கணவனின் கை - கால்கள்.. கோவளம் கடற்கரையில் உடல் பாகம் புதைப்பு..!

0 4394

சென்னையில் மாயமான விமான நிலைய ஊழியரை, துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்து வைத்ததாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், உடல் பாகங்களை கோவளம் கடற்கரையில் புதைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஜெயக்கிருபா. இவரது சகோதரர் ஜெயந்தன். இவர் சென்னை விமான நிலையத்தில் தாய் ஏர் வேஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 18 ந்தேதி பணிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும், சொந்த ஊரான விழுப்புரத்திற்கும் செல்லவில்லை என ஜெயக்கிருபா பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் ஜெயந்தன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து அவரது செல்போன் தொடர்புகளை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

இதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பாக்கிய லட்சுமி என்ற பெண்ணிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்த போது கொடூர கொலை சம்பவம் அம்பலமானது.

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட 38 வயதான பாக்கிய லட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி சென்னையில் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

தாம்பரம் கிரீன் லாட்ஜில் வைத்து 27 வயதான ஜெயந்தன் பாக்கியலட்சுமியை சந்தித்துள்ளார். அப்போது காதலில் விழுந்த ஜெயந்தன் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னைவிட 10 வயது மூத்தவரான பாக்கியலட்சுமியை மயிலம் முருகன் கோவிலில் வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், 2021 வரை ஜெயந்தனுடன் தொடர்பில் இருந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று விட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் காதல் மனைவியின் நினைவு வந்ததால் அவரை சந்திக்கும் ஆசையில் அவரை தொடர்பு கொண்ட ஜெயந்தன், புதுக்கோட்டைக்கு சென்று 19 ந்தேதி பாக்கியலட்சுமியை தனிமையில் சந்தித்த
போது தன்னை பிரிந்து வந்தது ஏன் ? எனக்கேட்டு ஜெயந்தன் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.

அவர்களுக்கிடையெ நடந்த சண்டையில் பாக்கியலட்சுமி கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஜெயந்தன் பரிதாபமாக பலியானதாகவும்,
கொலையை மறைக்க , தனது ஆண் நண்பர் சங்கர் என்பவரை வரவழைத்து ஜெயந்தனின் சடலத்தை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து வீட்டுக்குள் மறைத்து வைத்ததாக கூறப்படுகின்றது.

20 ந்தேதி பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட கை மற்றும் கால்களை ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு அரசு பேருந்தில் ஏறி சென்னை வந்த பாக்கியலெட்சுமி, தனது வாடிக்கையாளர்களை தனிமையில் சந்திக்கும் கோவளம் கடற்கரையில் ஒதுக்கு புறமான பகுதியில் அந்த உடல் பாகங்களை புதைத்ததாகவும், அதன் பின்னர் 26 ந்தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று தலை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களை டிராவல் சூட்கேசில் அடைத்து டாக்ஸியில் ஏற்றி செட்டி நாடு மருத்துவமனை அருகே வந்து இறங்கியதாக பாக்கிய லட்சுமி தெரிவித்தார்.

அங்குள்ள தனது ஆண் நண்பரான பூசாரி வேல்முருகனை அழைத்து சூட்கேஸை தூக்கிச்சென்று கோவளம் கடற்கரையில் மற்றொரு பகுதியில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாக்கியலட்சுமியை அழைத்துச் சென்று ஜெயந்தனின் உடல் பாகங்களை தோண்டி எடுக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

பாக்கிய லட்சுமி அழகாக இருப்பார் என்பதாலும், அவருக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை அறிந்தும் ஜெயந்தன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்துக்கு பின்னர் அவருக்கு 19 வயதில் மகள் இருப்பது தெரியவந்ததாலும், டவுண் பஸ் போல ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றியதால் பாக்கியலட்சுமியை ஜெயந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரிவு தற்போது கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments