காதலனுடன் லாங் டிரைவ்.... சபலக் காதலால் வீதியில் சடலமான ஜோடி..! இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிப்பு

0 5033

இரு ஆண்குழந்தைகளை காருக்குள் பூட்டி வைத்து விட்டு, பெண் ஒருவர், திருமணம் கடந்த காதலனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவனை ஏமாற்றி வீட்டை விட்டு வந்தவர் வீதியில் சடலமான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கோவில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசர் தற்கொலைக்கு முயல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தேவாலய வாசல் அருகே ஒரு ஆணும், பெண்ணும் மர்மமான முறையில் சடலமாக கிடந்தனர்.

அவர்களுக்கு அருகில் நின்ற டாடா சுமோ காருக்குள் இரு குழந்தைகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தைகளை மீட்டு உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அந்த குழந்தைகளோ தங்கள் தாய் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஆரல்வாய்மொழியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் ஆரோக்கிய சூசை நாதன் என்பது தெரியவந்தது.

ஆரோக்கிய சூசை நாதனின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த போது தனது கணவர் பல பெண்களுடன் சுற்றி வந்ததால் அவரை பிரிந்து ஆறுமுக நேரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டதாகவும், தனது கணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சில பெண்களின் பெயரையும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

சடலமாக கிடந்த பெண் யார் என்று போலீசார் விசாரித்த போது, அவர் மண்டைக்காடு புதூரை சேர்ந்த ஷாமினி என்பதும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கணவனை பிரிந்து , 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, காதலன் ஆரோக்கிய சூசை நாதனுடன் சென்றதும் தெரியவந்தது. இருவரும் கடந்த ஒரு மாதமாக காரில் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது.

ஷாமினியின் இரு குழந்தைகளும் தனது தாய் அழைத்துச்செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலை இந்தப்பகுதிக்கு வந்த இருவரும் நள்ளிரவில் குழந்தைகளை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு , பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து விபரீதமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த போலீசார் தற்கொலைக்காண காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இருவரது சடலங்களில் இருந்தும் தங்க நகைகளை கழட்டி அகற்றிய போலீசார், பிணகூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கானல் நீரான திருமணம் கடந்த சபல காதலுக்காக கணவனை விட்டு காதலனுடன் சென்ற ஷாமினி வீதியில் அனாதை சடலமாக கிடந்தார்.

உறவினர்கள் எவரும் வராததால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இரு குழந்தைகளும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments