வரதட்சணைக் கொடுமை… தீக்காயம் அடைந்த மனைவி… உயிரிழப்பு சந்தேகப்பிரிவில் கணவர் கைது

0 2520

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் கணவரை கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே வழுதாவூரைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சங்கீதா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் சங்கீதாவிடம் அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்ததால் கணவர் முத்துக்குமரனும் அவரது அக்கா கலையரசியும் சேர்ந்து, கடந்த 5ஆம் தேதி சங்கீதா வீட்டில் இருந்த போது பின்பக்கமாக அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி, கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் தீக்காயம் அடைந்த சங்கீதா, உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சங்கீதாவிடம், நடந்ததை வெளியில் சொல்ல நினைத்தால் உன்னை கொளுத்தியதுபோல, உன் பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என, முத்துக்குமரன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன சங்கீதா, நடந்த உண்மையை யாரிடமும் வெளியில் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதாவிடம், வாக்குமூலம் பெற்ற நீதிபதியிடம், தன் மீது மண்ணெண்ணையை யாரும் ஊற்றி கொளுத்தவில்லை, தானே கொளுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், சங்கீதாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடி, கெஞ்சி கூத்தாடி கேட்டபோது, நடந்த உண்மையை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments