பள்ளிக் குழந்தைகளுக்கு விஷமான தின்பண்டம்.. அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி..!
எடப்பாடியில் அரசு பள்ளியின் முன்பாக விற்கப்பட்ட தரமற்ற குளிர்பானத்தை வாங்கிச்சாப்பிட்டதால் 7 ஆம் வகுப்பு மாணவி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பள்ளியின் முன்பிருந்த தெருவோரக்கடையில் சோதனையிட்ட உணப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கெட்டுபோன பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுதெரு பகுதியிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், காலை பள்ளிக்கு செல்லும் போது பள்ளியின் முன்பு இருந்த தெருவோர கடையில் 2 ரூபாய்க்கு கூல்டிரிங்ஸ் வாங்கி சாப்பிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார்
சிறிது நேரத்திலேயே அந்த மாணவி திடீரென மயக்கமடைந்ததால், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த ஆசிரியர்கள் மாணவிக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவி குடித்த வர்ணம் கலக்கப்பட்ட பாக்கெட் குளிர்பானம் கெட்டு போனதால் அது புட் பாய்சனாக மாறியது தெரியவந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த உணவு பாதுகாப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு அமைக்கப்பட்ட தெருவோர கடைகளில் விற்பனை செய்து வந்த மாத்திரை வடிவ மிட்டாய்கள், தரமற்ற குளிர்பான பாக்கெட்டுக்கள், பொருட்களை பறிமுதல் செய்து காலாவதியான உணவுப்பொருட்களை கைப்பற்றினர்
குளோப் ஜாமூன் என்று விற்கப்பட்ட ஒரு டப்பாவுக்குள் அந்த பாட்டி கையை விட்டு எடுத்து கொடுப்பதை அறிந்த அதிகாரிகள் மூதாட்டியை கண்டித்தனர்.
அந்த கடைகளில் விற்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் குழந்தைகள் சாப்பிட தகுதி அற்ற பொருட்கள் என்று கூறிய அதிகாரிகள் அவற்றை மொத்தமாக அள்ளிச்சென்றனர்.
குழந்தைகள், சிறுவர்கள் விரும்பி உண்ணும் ஜங் புட்ஸ், கலர் மிட்டாய்மற்றும் தின் பண்டங்கள் போன்றவற்றை மொத்தமாக விற்கப்படும் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உடலுக்கு கேடு விளைவிக்கும் அந்த பொருட்களை அங்கேயே தடை செய்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படாது, அன்றாடம் பிழைப்புக்கு இவற்றை வாங்கி வியாபாரம் செய்வோருக்கு பொருள் இழப்பும் ஏற்படாது.
Comments