சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுத்த ஊர் கட்டுப்பாடு..! பாய்ந்தது சாதிய வன்கொடுமை வழக்கு..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடு என்று பள்ளி குழந்தைகளுக்கு கடையில் திண்பண்டம் தரமாட்டோம் என்ற விவகாரத்தில் 5 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப்பதிந்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பஞ்சாகுளம் கிராமத்தில் கடந்த 2வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடும்போது இரு தரப்பு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது
இந்த நிலையில் வன்கொடுமை புகார் அளித்தவர்களின் பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் தர முடியாது என்றும் ஊர் கட்டுப்பாடு வைத்துள்ளதாகவும் கூறிய கடைக்காரர் அதனை வீடியோவாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த சாதிபாகுபாடு வீடியோ வைரலானதை தொடர்ந்து வீடியோ பதிவிட்ட ராமச்சந்திரமூர்த்தி என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் 5 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரை உடனடியாக கைது செய்தனர்.
ஆளே இல்லாத அந்த கடையை இழுத்து பூட்டிய வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊரில் கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய மூவரை கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments