புதுக்கோட்டையில் இந்து-முஸ்லீம் இடையே நிலவும் மத நல்லிணக்கம்.. கும்பாபிஷேகத்திற்காக சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக இஸ்லாமிய சமூகத்தினர் இந்து முறைப்படி சீர் வரிசை வழங்கினர்.
இங்கு அமைந்துள்ள அய்யனார், கொம்புக்கார சுவாமி மற்றும் பரிவார ஆலயங்களில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மேலக்காட்டில் வசித்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்து பழம்,காய்கறிகள்,தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தி சென்று அளித்தனர்.
அதுபோல பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
அங்கு வசிக்கும் இந்து மக்கள் பிடாரியம்மன் கோவிலில் இருந்து சீர் எடுத்து ஊர்வலமாக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்று வழங்கினர்.
Comments