கூகுள் உதவியுடன் பெற்ற தாயை கொலை செய்த மகள்
கேரள மாநிலம் திருச்சூரில் Google - உதவியுடன் சொத்துக்காக பெற்ற தாயை கொன்ற மகள் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கீழ்குளத்தைச் சேர்ந்த சந்திரன் - ருக்குமணி தம்பதியின் மகளான இந்துலேகா, தனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால் தாயுடன் இருந்து வந்துள்ளார்.
அப்போது கணவருக்கு தெரியாமல் நகைகளை அடகு வைத்து 8 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கடன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்துலேகாவின் தாய் ருக்குமணியின் உடலில் விஷம் பரவி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன் ருக்குமணி உயிரிழந்த நிலையில், காவல்துறைக்கு மருத்துவர்கள் உடல்கூறு ஆய்வில் எலி விஷ மருந்துதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்திருந்தனர்.
இந்துலேகாவுக்கு 8 லட்ச ரூபாய் கடன் இருந்ததால் தாயின் வீட்டை தனது பெயருக்கு எழுதித்தர வற்புறுத்தி வந்ததும், அதற்கு தாய் மறுத்ததால் அவரைக் கொல்ல திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
இந்துலேகாவின் செல்போனில், மெதுவாக கொல்வது எப்படி? பிடிக்கப்படாமல் கொல்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன ? போன்ற தகவல்களை கூகுளில் தேடியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், தேநீரில் விஷம் கலந்ததையும், உணவில் மாத்திரைகள் கலந்து கொடுத்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்துலேகாவை கைது செய்த போலீசார் நேரில் அழைத்துச் சென்று எலி விஷம் வாங்கிய கடை, விஷம் கலக்க பயன்படுத்திய பாத்திரங்களை சாட்சியங்களாக சேகரித்துள்ளனர்.
Comments