6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற கொடூரத்தாய்...! செல்போன் பேச்சு அம்பலமானதால் ஆத்திரம்..!
திருவண்ணாமலை அருகே 6 வயது சிறுமி கரும்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாயின் செல்போன் பேச்சை காட்டிக் கொடுத்ததால் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பூபாலன் இவரது மனைவி சுகன்யா . இவர்களுக்கு எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ரித்திகா என்ற மகளும் இருந்தனர்.
சம்பவத்தன்று கணவர் பூபாலன் வழக்கம் போல் ஓட்டுநர் வேலைக்கு சென்ற நிலையில் மகள் ரித்திகாவை, தாய் சுகன்யா கரும்பால் அடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் பார்த்து பதறிப்போய் தடுத்து நிறுத்தி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலே சிறுமி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த குழந்தை ரித்திகாவின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தை வேலைக்கு சென்றபின் தாய் சுகன்யா, யாரிடம் பேசுகிறார் ? செல்போனில் என்ன பேசுகிறார் ? என்ற தகவலை தனது தந்தை பூபாலனிடமும், பெரியம்மாவிடமும் சிறுமி ரித்திகா மறைக்காமல் கூறிவிடுவதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே ரித்திகாவை கடுமையாக அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்திகா சொன்ன தகவலால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரித்திகாவை கரும்பால் வெறி கொண்டு தாக்கியதால் சிறுமி உயிர் இறந்தது தெரியவந்தது.
தாய் சுகன்யாவை கைது செய்த வெறையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.கணவன் இல்லா நேரத்தில் மறைத்து பேசி மாட்டிக் கொண்டதால் பெற்ற மகளை தாய் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments