பனிச்சரிவில் சிக்கி 5 அடி ஆழத்தில் புதைந்திருந்த பனிச்சறுக்கு வீரரை காப்பாற்ற உதவிய நாய்..!
அர்ஜெண்டினாவின் உசுவாயா நகரில் உள்ள மார்ஷியல் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 5 அடி ஆழத்தில் புதைந்திருந்த பனிச்சறுக்கு வீரரை விரைந்து கண்டறிந்து காப்பாற்ற உதவிய லாப்ரடார் வகை நாயை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இருவர் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பனிச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் உள்ளூர் அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு சக பனிச்சறுக்கு வீரர் மாயமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உள்ளூர் மீட்புக்குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு பணி பயிற்சி அளிக்கப்பட்ட டேங்கோ நாயுடன் அப்பகுதிக்கு சென்று வீரரை தேடி வந்தனர்.
அப்போது பனிக்குள் ஆழத்தில் சிக்கியிருந்த அந்த வீரரை மோப்ப சக்தி மூலம் துரிதமாக கண்டறிந்து அவர் இருக்கும் பகுதிக்கு அந்த நாய் சென்றுள்ளது. வீரரின் கைகள் அசைந்த நிலையில், மீட்புத்துறையினர் பனிக்குள்ளிருந்து அவரை தோண்டி எடுத்து உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
Comments