கொரோனா காதல்.. மனைவியிடம் பேச எதிர்ப்பு.. கணவரை கொன்ற காதலன்...!

0 4065
மதுரையில் கொரோனா காலத்தில் வேலை வாங்கிக்கொடுத்த பெண் மீது கொண்ட ஒரு தலை காதலால், பெண்ணின் கணவனை 3 பேர் கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது

மதுரையில் கொரோனா காலத்தில் வேலை வாங்கிக்கொடுத்த பெண் மீது கொண்ட ஒரு தலை காதலால், பெண்ணின் கணவனை 3 பேர் கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது.

மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் அலுமினிய பட்டறையில் கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், கோகுல், ராகுல் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று ராஜேஷ்குமாரை, சந்திக்க அவரது குடும்ப நண்பரான மருதுசூர்யா, என்பவர் தனது கூட்டாளிகளுடன் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மருது சூர்யா கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த ராஜேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ்குமார் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரைத்துறை போலீசார் விசாரணையில் கொரோனா கால ஒருதலைக்காதலால் நிகழ்ந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொரோனா காலகட்டத்தில் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த மருது சூர்யா கீரைத்துறை பகுதிக்கு மருத்து தெளித்தல் மற்றும் நோய் தொடர்பாக கணக்கெடுக்கும் பணிக்கு வந்துள்ளார். அப்போது ராஜேஷ்குமார் மனைவி சத்யாவிடம் விவரங்கள் சேகரித்த போது , அவரது செல்போன் நம்பரை பெற்றுள்ளான். பின்னர் நட்பு அடிப்படையில் போனில் சத்யாவிடம் பேசி வந்த சூர்யா, கொரோனா கேர் சென்டரில் தற்காலிக பணியில் சத்யாவை சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் வேலைக்கு சேர்த்து விட்டதை பயன்படுத்தி சத்யாவிடம் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு காதலிக்கச்சொல்லி தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தனது மனைவி சத்யாவை, மருதுசூர்யா போனில் கட்டாயப்படுத்துவதை அறிந்த கணவர் ராஜேஷ், மருது சூர்யாவை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருதுசூரியா, மீண்டும் சத்யாவை தொடர்பு கொண்ட போது கணவர் ராஜேஷ்குமார், அந்த செல்போனை வாங்கி பேசிஉள்ளார்.

அப்போது என்மனைவியோடு பேசுவதை நிறுத்தி கொள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருதுசூர்யா கூட்டாளிகளுடன் வந்து அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதையடுத்து மருது சூர்யா, தக்காளி சதீஷ், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments