தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு

0 8261
தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு

கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியின் கையை பிடித்து இழுத்துச்சென்று கட்டாய தாலி கட்ட முயன்ற அரசு கல்லூரி மாணவரை மடக்கி பிடித்த சக மாணவர்கள் அடிகொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

உறவு முறையில் தங்கையாக இருந்தாலும் பரவாயில்லை என்று தாலி கட்ட முயன்ற சைக்கோ காதலன் தமிழரசன் இவர் தான்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இந்தோ அமெரிக்கன் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்குள் புகுந்த அரசு கல்லூரி மாணவர் தமிழரசன் என்பவர் அங்கு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை வெளியே வருமாறு அழைத்துள்ளார். அந்த மாணவி வெளியே வர மறுப்பு தெரிவித்த நிலையில் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மாணவியை கையை பிடித்து கட்டாயப்படுத்தி இழுத்துச்சென்றார்.

அந்த மாணவி கத்திக் கூச்சலிட்டதால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி செக்கியூரிட்டி ஆகியோர் தமிழரசனை மடக்கிப்பிடித்து அவனிடம் இருந்து அந்த மாணவியை மீட்டதோடு, தமிழரசனை நாலு தட்டு தட்டி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணையில் அந்த மாணவியை தனது காதலி என்றும் 6 வருடங்களாக காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளான் தமிழரசன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரித்த போது உறவுமுறை தவறிய வில்லங்க காதல் சமாச்சாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழரசனும் அந்த மாணவியும், ஐயங்கார் குளம் கிராமத்தில் உள்ள மேல் நிலை பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர் அப்போதிருந்தே அந்த மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியின் தாய்க்கு தமிழரசன் தமது பெண் பின்னால் சுற்றும் தகவல் தெரியவந்துள்ளது.

தமிழரசனின் தந்தை தாய் குறித்து விசாரித்த தாய், அந்த மாணவிக்கு தமிழரசன் அண்ணன் உறவுமுறை என்று கூறியதால் அவர்களது காதல் கட்டானது. கடந்த 2 மாதங்களாக அவனுடன் பேசுவதை அந்த மாணவி நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தங்கையாக இருந்தாலும் பரவாயில்லை என்று காதல் தொல்லை கொடுத்து வந்த சைக்கோ தமிழரசன், சினிமா பாணியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை தூக்கிச்சென்று கட்டாய தாலி கட்டும் நோக்கத்தில் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சைக்கோ காதலன் தமிழரசனின் கைகளில் கைவிலங்கு மாட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி அவரை ஜெயிலில் அடைத்தனர். உருப்படாத சினிமாக்களை பார்த்து விட்டு, நிஜத்தில் அடாவடியாக கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கரம் பிடிக்க நினைத்தால் கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments