காஞ்சனா பேயை விரட்ட 18 வயது பெண்ணின் கை கால்களை கருக்கிய களவாணி பாபா..! அக்னிகுண்டம் வளர்த்து அத்துமீறல்.!

0 5721

காஞ்சனா பட பாணியில் பேய் ஓட்டுவதாக கூறி அக்னி குண்டம் வளர்த்து இளம் பெண்ணின் கால் கைகளை தீயில் கருக்கிய சம்பவம் தொடர்பாக தலைமறைவான களவானி பாபாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டம்மி பாபாவால் கை கால் கருகிய நிலையில், பெரிய கட்டுக்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அஸ்விணி இவர்தான்..!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் குக்கிந்தா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடையா, மஞ்சுளா தம்பதியினரின்18 வயது மகள் அஸ்வினி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

அஸ்வினிக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் உள்ள நாட்டு மருத்துவரான ரபிக் பாபா என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்தப் பெண்ணிற்கு நோய் எல்லாம் ஒன்றுமில்லை , பேய் பிடித்திருப்பதாக பெற்றோரிடம் கூறிய ரபீக் பாபா அந்த பேயை விரட்ட சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

அதன்படி சிறப்பு பூஜைக்கு என்று அக்னிகுண்டம் ஒன்றை வளர்த்த ரபீக் பாபா , அந்த இளம் பெண்ணின் கை மற்றும் கால்களில் இருந்து இறங்க மறுக்கும் பேயை விரட்டபோவதாக கூறி காஞ்சனா படம் பாணியில் பல்வேறு மந்திர தந்திர வேலைகளை செய்துள்ளார்.

உச்ச கட்டமாக அந்தப் பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளையும் தீ குண்டத்தில் காட்டும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த இளம் பெண் மறுக்கவே , பேய் அடம்பிடிப்பதாக கூறி தனது உதவியாளர்களை ஏவி உள்ளார்.

இதையடுத்து ரபீக் பாபாவின் உதவியாளர்கள் அந்த பெண்ணை இழுத்துச்சென்று கைகால்களை கொளுந்து விட்டு எரியும் அக்னி குண்ட தீயில் காட்டினர்.

இதில் கை கால்கள் கருகியதால் வலியால் அஸ்வினி அலறித்துடிப்பதை பார்த்த பெற்றோர் அவரை மீட்க முயல பேய் அந்த இளம் பெண்ணை விட்டு விரட்டப்பட்டதாக கூறிய அந்த டுபாக்கூர் பாபா அதற்கு உரிய பணத்தை கறந்து விட்டு அனுப்பி உள்ளான்.

நடக்க இயலாமல் மயக்க நிலையில் கிடந்த தங்கள் மகளை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இரு கால்கள் மற்றும் கைகளிலும் பெரிய அளவிலான கட்டுக்கள் போடப்பட்டு அஸ்வினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சனா போன்ற பேய் படங்களை பார்த்து பேயை விரட்டும் பூஜை உண்மை என்று மடத்தனமான நம்பி தங்களது பெண்ணின் கைகால்களை கருக்குவதற்கு பெற்றோரே துணை போன சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட இளம் பெண் அஸ்வினி, அவரது பெற்றோரிடம் விசாரித்த போலீசார் அக்னிகுண்டம் வளர்த்து கைகால்களை கருக்கியதோடு, காசுவாங்கிக் கொண்டு தலைமறைவான டம்மி பாபா ரபீக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments