வரும் 2 மாதம் கடினமான காலம், சவால்களை சந்திக்க மக்கள் தயார் நிலை.. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரை.1
இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், எரிபொருள் விலை உயரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 4 லட்சம் டன் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வருவிருக்கும் இரண்டு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிக கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார். 15 மணி நேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார சவால்களை மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண 75 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி இரண்டே நாட்களில் தேவைப்படுவதாக கூறிய ரணில், ஒரு நாளுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பில் இருப்பதாகவும், டீசல் வரத்து காரணமாக பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகளை சீரமைக்க புதிய பட்ஜெட், நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் அச்சடிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகளை எடுக்க உள்ளதாக ரணில் மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த இரு மாதங்களில் இந்தியாவில் இருந்து தலா இரு கப்பல்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வர உள்ளதாகவும், 12 தவணையில் நான்கு லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள், கடன் உரிமை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும் ரனில் தெரிவித்தார்.
தமது குறிக்கோள் மற்றும் அர்ப்பணிப்பு தனி நபரையோ, குடும்பத்தையோ காக்கும் முயற்சி இல்லை என்றும், நாட்டு மக்களையும் வருங்கால இளைஞர் சமுதாயத்தையும் காக்கும் திட்டம் என ரணில் விக்ரமிசிங்கே தமது உரையில் குறிப்பிட்டார்.
Comments