கல்குவாரியில் சரிந்த ராட்சத பாறை... இடுபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்பு... மற்ற 4 பேரின் கதி என்ன?

0 2890

திருநெல்வேலி அருகே கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில், சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மேலும் 4 பேரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் நெல்லை விரைந்துள்ளனர். பாறைகள் தொடர்ந்து சரிவதால், பரபரப்பு நீடிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் சங்கர நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியை செல்வராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல செல்வகுமார், இராஜேந்திரன், செல்வம், முருகன் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள், 2 லாரிகள் மற்றும் 3 ஹிட்டாச்சி வாகனங்களில் கல்குவாரியில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிவு 12 மணியளவில் ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு கற்கள் அள்ளும் பணி நடைபெற்று வந்த பள்ளத்தினுள் விழுந்தது.

இதில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில், பாறை விழுந்த சத்தம் கேட்டு கல்குவாரியின் அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பாளையங்கோட்டை, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. ஆனால், இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாததாலும் லேசான மழைப்பொழிவு இருந்ததாலும் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாலை 5 மணியளவில் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகள் மீண்டும் தொடங்கின. ராமேஸ்வரம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் நீண்ட போராட்டத்துக்கு பின், ஹிட்டாச்சி வாகன ஆபரேட்டர்கள் முருகன் மற்றும் விஜய் ஆகியோரை இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர். மற்ற 4 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை சரக டிஐஜி பர்வேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கல்குவாரி விபத்து குறித்து பேசிய நெல்லை சரக டிஐஜி பர்வேஷ் குமார், 2 பேர் குவாரியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 4 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதனிடையே, அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கல்குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்குவாரி விபத்து குறித்து பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, குவாரியில் கற்கள் தொடர்ந்து சரிந்து விழுவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரை மீட்பதற்காக 30 பேர் கொண்ட மீட்பு படையினர் நெல்லைக்கு விரைவதாக கூறிய ஆட்சியர், குவாரியில் விதி மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments