அடிக்கடி மாமூல் கேட்டு தொல்லை.. பெற்றோரை சந்தித்து முறையிடச் சென்ற மருந்தக உரிமையாளர்.. அடித்தே கொன்ற ரௌடி..!
பெரம்பலூர் அருகே மாமூல் கேட்டு தொல்லை செய்த ரௌடி குறித்து அவனது பெற்றோரிடம் புகாரளிக்கச் சென்ற மருந்தக உரிமையாளரை, சம்மந்தப்பட்ட அந்த ரௌடி அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
லாடபுரத்தில் நாகராஜன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த "எழுத்தாணி" பிரபாகரன் என்ற நபர், போதையில் அவரிடம் அவ்வப்போது மாமூல் கேட்டு தொல்லை செய்வான் என்று கூறப்படுகிறது. அவனது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தால், பிரபாகரனின் பெற்றோரை சந்தித்து முறையிடலாம் என அவனது வீட்டுக்குச் சென்றுள்ளார் நாகராஜன். ஆனால் பிரபாகரனின் பெற்றோர் இல்லாத நிலையில், அவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.
தன்னைப் பற்றி புகார் சொல்ல வந்தததால் ஆத்திரமடைந்த அவன், கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகராஜனை கடுமையாகத் தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்து தப்பியோடி வந்த நாகராஜ், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments