வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் பலி
தூத்துக்குடியில், நள்ளிரவில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அண்ணா நகரைச் சேர்ந்த முத்துராமன் - காளியம்மாள் தம்பதியின் ஒரே மகளான கார்த்திகா, திருமணமாகி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வெள்ளியன்று அவருக்கு வளைகாப்பு நடத்தி, தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
நேற்றிரவு கார்த்திகா தனது பெற்றோருடன் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகள் பழமையான அந்த வீடு ஏற்கனவே சிதிலமடைந்து இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இடிந்து விழுந்து சப்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதற்கிடையே இடிபாடுகளில் சிக்கி நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகாவும் அவரது தாய் காளியம்மாளும் உயிரிழந்த நிலையில், தந்தை முத்துராமன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments