அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிச் சென்ற கல்லூரி மாணவன் கீழே விழுந்து பலி
கும்பகோணத்தில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிச் சென்ற கல்லூரி மாணவரின் புத்தகப்பை சாலை நடுவே இருந்த விளம்பரப் பலகையில் சிக்கி கீழே விழுந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த தேவமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற அந்த மாணவர், கல்லூரி முடிந்து வழக்கம்போல் ஜெயங்கொண்டம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், மாணவர் படியில் தொங்கியவாறு சென்றுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பேருந்து வழக்கமான சாலையில் வாகன நெரிசல் இருந்ததால், எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது சாலை நடுவே டிவைடரில் உள்ள மின்கம்பத்தில் பாதி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பழைய விளம்பரப் பலகையில் சதீஷ்குமார் முதுகில் மாட்டியிருந்த புத்தகப்பை சிக்கி இருக்கிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவர், தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் உயிரிழப்புக்குக் காரணம் ஓட்டுநர், நடத்துநரின் அலட்சியமே எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Comments