122 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் பதிவு
இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு பகுதிகளில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியசாகவும், மத்திய இந்திய பகுதிகளில் 37.78டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது. மேலும், வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மே மாதத்திலும் வழக்கமான வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்தில் இரவுப்பொழுது வெப்பமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை குறைவாக இருந்ததால் வெப்பம் அதிகரித்ததாகவும், நடப்பு மே மாதத்தில் சராசரி மழைபொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Comments