பெண்ணை ஆட்டோவில் கடத்தி அத்துமீறிய பெண் கவுன்சிலர் மகன்.. 3 நாட்களாக பூட்டி வைத்து சித்ரவதை.!

0 5876

ஆளும்கட்சி கவுன்சிலர் மகன் கூட்டாளியுடன் சேர்ந்து, இளம்பெண் ஒருவரை கடத்திச்சென்று, மூன்று நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது...

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் அருகிலுள்ள கொத்தாடா நகராட்சியில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியின் 26 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் முகமது பாத்திமா. இவருடைய மகன் கவுஸ். தன்னுடைய தாய், வார்டு கவுன்சிலராக இருப்பதால் கவுஸ் எந்த வேலைக்கும் செல்லாமல் போதை பழக்கத்துக்கு அடிமையாகி ஊதாரியாக ஊர் சுற்றி வந்தான்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், தங்களுடைய மகளை காணாமல் அந்த பெண்ணின் பெற்றோர் மூன்று நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கவுன்சிலரின் மகன் கவுஸ் அவனது கூட்டாளி சாய்ராம் ரெட்டி ஆகியோர் மாயமான இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றதை பார்த்ததாக சிலர் கூறினர். இதையடுத்து கடத்தப்பட்ட தங்கள் வீட்டுப்பெண், கவுஸ் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று நியாயம் கேட்டனர்.

வீட்டில் இருந்த கவுஸ், சாய்ராம் ரெட்டி ஆகியோர் தங்களுக்கு தெரியாது என்று கூறினர், அவர்களது பதற்றமான நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்க்க முயன்றனர். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர் .

இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்க்க முயன்றபோது அவர்களையும் கவுன்சிலர் மகன் தடுத்து நிறுத்தி உள்ளான். ஆனால் போலீசார் அவர்களை மீறி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அந்த இளம்பெண் அங்குள்ள படுக்கையில் ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடப்பது கண்டு காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

அந்த பெண்ணை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் போலீசாரிடம் பெண்ணின் தாயார் புகார் அளித்தார்.

மீட்கப்பட்ட இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கவுன்சிலர் மகன் கவுஸ், கூட்டாளி சாய்ராம் ரெட்டி ஆகிய இரண்டு பேரும் தன்னை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலவந்தமாக குடிக்கச் செய்ததாகவும், அதன்பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும், சனிக்கிழமை மாலை மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்த்தபோது அவர்கள் இரண்டு பேரும் தன்னை பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்ததாக கூறி கதறி அழுதார் அந்தப்பெண்.

மீண்டும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பலவந்தமாக குடிக்க வைத்ததாகவும், ஞாயிறு அன்று கண்விழித்து பார்த்த அவர்களுடன் சண்டையிட்டதால், தன்னை பயங்கரமாக தாக்கி சித்திரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் 3 வது முறையாக தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பலவந்தமாக குடிக்க வைத்து அத்துமீறியதாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப்பெண் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் காமுகன் கவுஸ் , சாய்ராம் ரெட்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments