ஒரு ரவுடி என்றும் பாராமல் மாவுக்கட்டு போட்ட போலீசார்.. குதித்ததால் வழுக்கியதாம்..!
சேலம் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி நகை பணம் பறித்து வந்த வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் ரவுடிக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. நடக்க இயலாமல் தவித்த ரவுடிக்கு மாவுக்கட்டுப்போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மேட்டூர் அடுத்த கருமலைக்கூடல் தொழிற்பேட்டையில் கெமிக்கல் தொழிற்சாலை நடத்தி வருபவர் பசுபதி , கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி அழகு , அவரிடம் இருந்து பணம் ,செல்போன்,வாட்ச் உள்ளிட்ட பொருட்களை பறித்துள்ளார். இதனை அடுத்து தொழிலதிபர் பசுபதி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கருமலைக்கூடல் போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி அலகுவை தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு புதுக்காடு ஓடை என்ற இடத்தில் ரவுடி அழகு மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று துரத்தியபோது அருகிலுள்ள பாலத்தின் மேலிருந்த ரவுடி கீழே குதித்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ரவுடி அழகுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
எழுந்து நடக்க இயலாமல் தவித்த ரவுடியை மனித நேயத்தோடு மீட்டு, அவரை சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, வலது காலில் மாவு கட்டு போட்டு,சேலம் மத்திய சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்
ரவுடியாக வலம் வந்ததால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைக்கு சென்று வந்த ரவுடி அழகு மீது கடந்த 2015-ம் ஆண்டு செந்தில்குமார் கொலை வழக்கு, 2018-ம் ஆண்டு கோம்பூரான் காட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் பணத்திற்காக கண்ணன் என்ற கூலி தொழிலாளி கொலை வழக்கு, பல முக்கிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட வழக்கு என குற்றப்பட்டியல் நீள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments