இறந்துவிட்டதாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்

0 5543

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துறையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் வெளியூர்களுக்கு சென்று கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். அவ்வாறு சில மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்ற மூர்த்தி, வீடு திரும்பவில்லை. இவரது மகன்கள் கார்த்தியும் பிரபுவும் பல இடங்களிலும், தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடப்பதாக கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று பார்த்த போது, முகம் அழுகியிருந்த நிலையில் உடல் தோற்றத்தை வைத்து இறந்துக் கிடந்தது தந்தை தான் என முடிவு செய்த கார்த்தி, காவல்துறையினரிடம் தெரிவித்துவிட்டு சடலத்தை துறையம்பாளையம் கொண்டு வந்து அடக்கம் செய்தார்.

இந்நிலையில், நேற்றிரவு வீடு திரும்பிய மூர்த்தி தான் கர்நாடகாவுக்கு வேலைக்காக சென்றிருந்ததாக கூறியிருக்கிறார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியடைந்தனர். இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் பரவியதால் கிராம மக்கள் மூர்த்தியை பார்த்து சென்றனர்.

இதனையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments