கோவையில் யுபிஎஸ் சாதனம் தீப்பிடித்து எரிந்து எழுந்த புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி தாய், 2 மகள்கள் மற்றும் வளர்ப்பு நாயும் பரிதாபமாக உயிரிழப்பு.!

0 2351

கோவையில் யுபிஎஸ் எனப்படும் தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம் தீப்பற்றி எரிந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தாய், இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், வீட்டில் வளர்த்த செல்ல நாயும் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது.

உருமாண்டபாளையம் ஜோஸ் கார்டன் பகுதியிலுள்ள அந்த வீட்டில் கணவரை இழந்த விஜயலட்சுமி என்ற பெண் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

அதிகாலை இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை எழுந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு தீயணைப்புத்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் தாயும் ஒரு மகளும் படுக்கை அறையில் மற்றொரு மகளும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர்.

வீட்டின் மூலையில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயும் வாயில் ரத்தம் கசிந்தபடி இறந்துகிடந்தது.  யுபிஎஸ் மின்சாதனம் தீப்பிடித்ததால் ஏற்பட்ட ரசாயன விஷவாயுவில் சிக்கி மூச்சுத்திணறி 3 பேரும் இற்ந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

யுபிஎஸ் சாதனத்தை காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்க வேண்டும் என்பதோடு, அவ்வப்போது உரிய தொழில்நுட்ப வல்லுநரைக் கொண்டு அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments