ரஷ்யாவும், நேட்டோ படைகளும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால், அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் - ஜோ பைடன்

0 1859

ரஷ்யாவும், நேட்டோ படைகளும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால், அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 17-வது நாளை எட்டிய நிலையில், தலைநகர் கீவ் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. மரியுபோல், வினிட்ஷா உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உள்பட 600-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ராணுவ நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், உக்ரைனில் ரஷ்ய படைகள் ரசாயான ஆயுதங்களை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் போர் குற்றங்களுக்கு அதிபர் புதின் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

உக்ரைனில், ரஷ்யாவுடன் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் நேருக்கு நேர் சண்டையிடாது என்று தெரிவித்த அதிபர் பைடன், ஒருவேளை நேட்டோ படைகளும், ரஷ்யாவும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானால் அது மூன்றாவது உலகப் போரை தூண்டிவிடும் என்றார்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஐரோப்பிய நட்பு நாடுகளின் எல்லையின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் என்றார். உக்ரைனுக்கு கூடுதல் விமானம் மற்றும் டாங்கிகள் தடுப்பு ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கி உள்ளதாக பைடன் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஜி 7 மற்றும் ஐரோப்பியாவின் நட்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தப் போவதாகவும் ரஷ்யாவில் இருந்து வோட்கா, கடல் உணவு, வைரம் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக பைடன் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments