இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட காட்டுப்பூச்சியை காய்ச்சி எடுத்த இளைஞர்கள்

0 3481

கரூர் அருகே சினிமா பாணியில் இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட, இளைஞரை, வாகனத்தை பறிகொடுத்தவர்கள் ஒன்று கூடி  அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கு சொந்தமான ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடந்த அக்டோபர் மாதம் 25 ந்தேதி இரவு பறித்துச்சென்று உள்ளனர்.

புகாரின்பேரில் விசாரணையை முன்னெடுத்த திருவெரும்பூர் போலீசார், பறித்துச்செல்லப்பட்ட வாகனத்தை 28ந்தேதி கரூர் மாவட்டம் உள் வீரராக்கியம் கிராமத்தை சார்ந்த பாஸ்கரன் என்பவரது தோட்டத்தில் இருந்து மீட்டனர்.

விசாரணையில் பாஸ்கரன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது ஆக்டிவா வாகனத்தில் வந்த மர்மநபர் பாஸ்கரனிடம் பேச்சுக் கொடுத்தபடி, அவருடைய கேடிஎம் 200சிசி வண்டியை ஓட்டி பார்ப்பதற்கு கேட்டுள்ளான்.

அவனிடம் நீ யார் என்று கேட்டதற்கு கட்டளை பெரியசாமி என்பவரின் மகன் என்று சொல்லி ஆக்டிவா வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு கேடி.எம் வண்டியை ஓட்டிப்பார்ப்பதாக கூறி திருடிச்சென்றது தெரியவந்து.

பின்னர் கேடி.எம் வண்டியை தேடிப் பார்த்ததில் அந்த வண்டியை, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பத்தாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து சென்றிருப்பது தெரியவந்தது.

சினிமா பாணியிலான இந்த தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் காட்டுப்பூச்சி நிஷாந்த் என்பவனை மடக்கி பிடித்த பாஸ்கரனின் மகன்கள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகின்றது

காட்டுப்பூச்சி நிசாந்தை மரத்துக்கு அடியில் அமரவைத்து ஆளுக்கொரு குச்சியால் அடி வெளுத்தனர். வாகனத்தை திருடி போலீசுக்கு கடுக்கா கொடுத்தவனை மடக்கிப்பிடித்து கஞ்சி காய்ச்சிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

குச்சியாலும், கை, கால்களாலும் தாக்குதலுக்கு உள்ளான நிஷாந்த் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளான்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனின் மகன்கள் மற்றும் அவரின் நண்பர்களை வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments