ஒத்த ஓட்டு தெரியும் அதென்ன நாக் அவுட் ? நல்லா தான் செய்யுறாங்க..! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!

0 5029
ஒத்த ஓட்டு தெரியும் அதென்ன நாக் அவுட் ? நல்லா தான் செய்யுறாங்க..! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!

ஒற்றை ஓட்டுக்கிடைக்காமல் தோற்றவர்களையும், ஒரே ஒரு ஓட்டில் வென்றவர்களையும் அடையாளம் காட்டியுள்ள இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டு கூட இல்லாமல் வேட்பாளரை நாக் அவுட் செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜம், அப்படி இருக்கையில் நடந்து முடிந்த நகர்புற தேர்தலில் பல வினோதமான முடிவுகளை வழங்கி வாக்காளர்கள் அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு இன்பத்தையும், அதிர்ச்சியையும் வழங்கி இருக்கின்றனர்.

பழனி நகராட்சி 12 வது வார்டில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முருகேசன் மற்றும் அதிமுக வேட்பாளர் சின்னத்தாய் ஆகிய இருவருக்கும் வாக்களர்கள் சரி சமமாக தலா 499 வாக்குகளை கொடுத்து இருந்தனர். குலுக்கல் முறையில் சீட்டு குலுக்கி போட்ட போது அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார்.

மதுரை மாநகராட்சிகுட்பட்ட 63 வது வார்ட்டில் அதிமுகவின் கிருஷ்ணமூர்த்தி , சிபிஎம் கணேசன்ஆகியோர் ஒரே மாதிரி தலா 1394 வாக்குகள் பெறிருந்தனர். இதையடுத்து நடந்த குலுக்கலில் வெற்றி அதிமுக வேட்பாளர் வசமானது

பணகுடி பேரூராட்சியில் நான்காவது வார்டில் பாரதிய ஜனதா வேட்பாளர் மனுவேல், அதிமுக வேட்பாளர் உஷா ஆகியோர் தலா 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். குலுக்கல் முறையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மனுவேல் வெற்றியை தனதாக்கினார். அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயராஜ் 265 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட சுடலி என்பவர் 260 வாக்குகள் பெற்று சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவினர்

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் பேரூராட்சியில் 3வது வார்டில் திமுகவை சேர்ந்த பாப்பாத்தி 189 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக பெண் வேட்பாளர் செல்வி 190 வாக்குகள் பெற்று 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 9 ஆவது வார்டில் மதிமுக வேட்பாளர் அந்தோணிராஜை விட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 1 வாக்கு கூடுதலாக பெற்று வெற்றியை தொட்டார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் ஏழாவது வார்டு திமுக சார்பில் மீனா, அதிமுக சார்பில் ராஜலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி ஆகிய மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாலதிக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார்.

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 4 மற்றும் 15 ஆகிய இரண்டு வார்டுகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கோமதி சொந்த வார்டான 15வது வார்டில் 12 ஓட்டுகள் பெற்ற நிலையில் 4வது வார்டில் ஒரு ஓட்டுக்கூட வாங்காமல் நாக் அவுட் ஆனார்.

கும்பகோணம் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 35 வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செந்தில்குமார் ஒரு வாக்கு கூட பெறாமல் நாக் அவுட் ஆனார்.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சியில் 6-வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நிரோஷாவும் ஒரு வாக்கு கூட பெறாமல் நாக் அவுட் ஆனார்.

கறம்பக்குடி பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம்ஷா ஒரு ஓட்டுக்கூட பெறாமல் நாக் அவுட் ஆனார்.

சிவகங்கை நகராட்சி 1 வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறாமல் நாக் அவுட் செய்யப்பட்டார்.

ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர் என்றால் ஒன்று அவரது குடும்பத்தினரே அவருக்கு வாக்களித்திருக்கமாட்டார்கள் அல்லது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அந்த வார்டில் வாக்கு இருந்திருக்காது என்று சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments