தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மழலையர் பள்ளிகள் இன்று திறப்பு.!
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருப்பதால், தியேட்டர்கள் இன்று முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்ததை அடுத்து, கடந்த 12ந் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கூடுதல் தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
பொருட்காட்சிகள் நடத்தவும், அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் கலை விழாக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ணவும், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் படம் பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஊரடங்கில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள்.
இதை தவிர்த்து முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இடம்பெற்றிருந்த பிற கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் பெரும்பாலான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளதால், பழைய நிலை மீண்டும் திரும்பியுள்ளது.
Comments