கண்ணாமூச்சி ஆடிய படப்பை குணா பக்காவாக சரண்..! போலீசாரிடம் சிக்காமல் கோர்ட்டுக்கு வந்தது எப்படி ?

0 27330
தலைமறைவாக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

தலைமறைவாக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தான். காஞ்சிபுரம் எஸ்.பியின் தனிப்படை போலீசார் குணாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்கிற படப்பை குணா மீது 8 கொலை, 9 கொலை முயற்சி, ஆள் கடத்தல் உட்பட 48 வழக்குகள் பல காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரவுடி படப்பை குணா தனது கூட்டாளிகள் துணையுடன் ஸ்ரீபெரும்புதூர் தொழில் நிறுவனங்களை மிரட்டி இரும்பு கழிவுகளை அகற்றும் ஒப்பதந்தை கைப்பற்றி அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகின்றது.

இந்தனிலையில் அதற்கு போட்டியாக வரும் நபர்களை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் போட்டதாக குற்றஞ்சாட்டிய போலீசார் ஏ.எஸ்.பி வெள்ளதுறையை சிறப்பு அதிகாரியாக நியமித்து படப்பை குணாவை தேடிவந்தனர். படப்பை குணா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவான நிலையில் அவரது மனைவி எல்லம்மாள் கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, சிவா என சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், படப்பை குணாவால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயத்துக்காக பயன்படுத்தி வந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஏரி நிலத்தை மீட்டனர். குணாவைத் தேடுதவதில் போலீசாரின் வேகத்தைப் பார்த்த எல்லம்மாள், தனது கணவர் சரணடைய தயாராக இருக்கிறார் என்றும் அவரை என்கவுண்ட்டர் செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து,

போலீசாரிடம் சிக்காமல் போக்குகாட்டிய குணா தனது வழக்கறிஞர்கள் புடை சூழ செவ்வாய்கிழமை சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

அவனை வரும் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்ற நடுவர் கிருஷ்ணா உத்தரவிட்டார். பாதுகாப்பு காரணங்கள் கருதி ரவுடி படப்பை குணாவை புழல் சிறையில் அடைக்காமல் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க சிறைத்துறை டிஐஜி பரிந்துரைத்தார்.

கர்ப்பிணிப் பெண்ணை மிரட்டி நில அபகரிப்பு செய்த வழக்கில் சரணடைந்துள்ள குணாவை அடுத்தடுத்து மற்ற வழக்குகளிலும் கைது செய்ய திட்டமிட்டுள்ள போலீசார், பூந்தமல்லி கிளைச் சிறையில் அவனை அடைத்தனர். காஞ்சிபுரம் எஸ்.பியின் தனிப்படை போலீசார் குணாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments