கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை.!
இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று உலகெங்கும் கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமசையொட்டி நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இயேசு பிரானின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில் பிரமாண்ட குடில் அமைக்கபட்டிருந்தது.
மத இன மொழி வேறுபாடின்றி கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் விழா என்று மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்தார்.
பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்துமசை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தேவாலயம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிருஸ்துமஸ் விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.
புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள தூய ஜென்மராகினி ஆலயம், அன்னை ஆரோக்கிய மாதா உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில், கொரோனா தொற்று முழுவதுமாக அகல வேண்டி கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
Comments