வீட்டை திறந்து போட்டு சீரியல் பார்த்த பெண்களிடம் கத்திமுனையில் கொள்ளை..! பட்டபகலில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..!

0 4353
வீட்டை திறந்து போட்டு சீரியல் பார்த்த பெண்களிடம் கத்திமுனையில் கொள்ளை..! பட்டபகலில் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்..!

காஞ்சிபுரத்தில் வீட்டின் கதவை பூட்டாமல், சமையல் வேலைபார்த்துக் கொண்டே , டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருப்பதை நோட்டமிட்டு வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், அங்கிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து 80 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகே மாருதி நகரை சேர்ந்தவர் ஆடிட்டர் மேகநாதன். இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர், இவர்கள் மூவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மேகநாதன் சகோதரர்கள் இருவரும் அரசு துறையில் பணியாற்றி வரும் நிலையில் வழக்கம் போல அவர்கள் வியாழக்கிழமை பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் 3 சகோதரர்களின் மனைவிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

அதில் இரு பெண்கள் சமையலறையில் வேலைபார்த்துக் கொண்டே டிவியில் அதிக சத்தத்துடன் சீரியல் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. வீட்டில் சீரியல் ஓடும் சத்தத்தை கேட்டு வீட்டின் கேட்டை திறந்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர் இருவர், பூட்டப்படாமல் சாத்திவைக்கப்பட்டிருந்த கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த இரு பெண்களின் கழுத்திலும் நீளமான கத்திகளை வைத்து அழுத்தியபடி, நகை பணம் எங்கே ? என்று மிரட்டி உள்ளனர். உயிருக்கு பயந்த அவர்கள் தங்கள் படுக்கை அறையில் இருந்த பீரோவில் இருந்து 80 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5 லட்சம் ரூபாயை மூட்டையாக கட்டி எடுத்துக் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த பெண்கள் சத்தம் போட்டு விடக்கூடாது என்று இருவரது கைகால்களை கட்டிபோட்டு வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகை பணத்துடன் தப்பிய கொள்ளையர்கள் வெளியில் நின்ற இரு கூட்டாளிகளுக்கும் சிக்னல் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதற்க்கிடையே இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெரியாமல் , மேல்மாடியில் இருந்து அப்போது இறங்கி வந்த பெண் ஒருவர், இருவரது வாயில் இருந்த துணியை எடுத்ததும், கொள்ளையன் தப்பி செல்வதாக கூறி அபயக்குரல் எழுப்பி உள்ளனர்.

ஆனால் அதற்குள்ளாக அந்த முகமூடி கொள்ளைக் கும்பல் தப்பி சென்று விட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்தபகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மாஸ்க் அணிந்தபடி தலையில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு 2 மர்ம ஆசாமிகள் அக்கம் பக்கத்து வீடுகளை நோட்டம் விட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காண இயலவில்லை என்று கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட வீட்டில் 2 அரசு அதிகாரிகள் இருப்பதால் கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு மேலும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

அந்த பகுதியில் ஒதுக்குபுறமான வீடு என்பதாலும், வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை பூட்டு போட்டு பூட்டாமலும், முன்பக்க வாசல் கதவை பூட்டிவைக்காமலும் இருந்ததால் கொள்ளையர்கள் எளிதாக வீட்டிற்குள் புகுந்து விட்டதாக தெரிவித்த போலீசார், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறந்து போட்டு அதிக சத்தத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்தால் வீட்டிற்குள் யார் வருகிறார்கள் என்பது தெரியாமல் கொள்ளையர்களுக்கு சாதகமாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

அதே நேரத்தில் லட்சகணக்கில் வீட்டில் பணம் வைத்திருக்கும் செல்வந்தர்களான 3கோதரர்களும் சில ஆயிரங்களுக்கு வீட்டை சுற்றி சிசிடிவி காமிரா அமைத்திருந்தால் கொள்ளையர்கள் உள்ளே நுழைய அஞ்சி இருப்பார்கள் என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments