நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் நாற்காலி வீச்சு..! திமுகவினர் ஆவேசம்..!
கன்னியாகுமரி கூட்டத்தில் சவால் விட்டுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரை, திமுகவினர் மேடையேறி அடிக்கப் பாய்ந்த சம்பவத்தால், தர்மபுரி மாவட்டம் அரூரில் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் அவதூறு பேசுவதாகக் கூறி நாற்காலி வீசப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
மேடையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரை அமர வைத்து, வா... வந்து தொட்டுப்பாரு மவனே... என்று சவால் விட்டு பேசியதால் பிரபலமானவர் நாம் தமிழர் கட்சியின் மேடை பேச்சாளர் ஹிம்லர்..!
அதே பாணியில் கனிமவளக்கொள்ளையை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் ஹிம்லர்..! அப்போது மேடையில் ஏறிய திமுக பிரமுகர் ஒருவர் , அவதூறாகப் பேசாதே என்று கூறி வாக்குவாதம் செய்ததோடு அவரை அடிக்கப் பாய்ந்தார், அருகில் இருந்த நாம் தமிழர் தம்பிகள் தடுத்த நிலையில், மேடையில் இருந்த மைக் ஸ்டாண்டைத் தூக்கி எறிந்தனர். அதற்குள்ளாக ஆவேசப் பேச்சாளர் ஹிம்லர் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் முன்னிலையில் மேடையில் சிலரால் ரகளை நடந்த அதே நேரத்தில், கீழிருந்து ஒருவர் மேடையில் நின்ற நாம் தமிழர் நிர்வாகி மீது நாற்காலியை தூக்கி வீசினார்.தொடர்ந்து அங்கு ஆவேசமாக நடந்த ரகளையால் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. அங்கு படம் பிடித்துக் கொண்டிருந்தவரையும் அங்கிருந்து விரட்டினர்.
காவல்துறை அனுமதியுடன் நடந்த கூட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
Comments