அடுத்தாண்டு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் - அறிவிப்பை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி
அடுத்தாண்டு பிப்ரவரியில் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கும், மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த ஆண்டு 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அறிவிப்பு வெளியான 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குரூப்-4 பிரிவில் 5,255 பணியிடங்களும், குரூப்-2, குரூப்-2ஏ பிரிவில் 5,831 பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் தெரிவித்த பாலச்சந்திரன், டிஜிட்டல் முறையில் விடைத்தாள் திருத்தப்படும் என்று கூறினார்.
தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
Comments